நேற்று என்ற கடந்தகாலத்துக்கும் நாளை என்ற
எதிர்பார்ப்பிற்கும் நடுவில் நகர்கின்ற வாழ்க்கை
காற்று வீசும் திசையில் வழிப்போக்கன் எனக்கு
வழிகாட்டியாக வந்து வித்திட்ட தெய்வங்களே!
மோதலின் பின் காதல் மாற தேவையில்லை என
இருவரின் தீவிர ரசிகனாக தினம் கற்றேனே!
பாதம் வருடும் பாதணியை கழட்டி வீட்டினுள் வந்து
அன்பை பகிர்ந்திட மறக்காத தெய்வங்களே!
நலன் கருதி அவர்கள் விதித்த விதிமுறைகள் சில
விந்தை மிக்க வினோத உலகில் வேண்டியனவே!
பலன் எதிர்பாரா அன்பை வழங்கி என்னை பல
ஜென்ம கடனாளியாக்கிய தெய்வங்களே!
உலகப்போரை விட பெரிய ஒலிப்போர் நிகழும்
சில மணித்துளிகளில் போர் நிகழ்ந்த தடங்கள்,
புலன்களில் தென்படாத மாயம் காட்டித்தந்து
கலங்கள் முழுதும் சேர்ந்துள்ள தெய்வங்களே!!!
அரவணைப்பும் அடியும் கஞ்சமின்றி தந்தருளி
மற்றவரில் நல்லதை எடுத்து,தீயதை விட்டு அன்பை
பரப்பிட மறவாமல் கற்றுத்தந்த என் முன்னேற்ற
படிக்கட்டுகளாக அமைந்துள்ள தெய்வங்களே!
இடர் வரினும் இதழோரம் உங்கள் பெயர்களே!
மரணப்பட்டியலில் முதலிடம் நம்மில் எவரெனினும்
கடந்திடும் காலத்தில் பிறந்திடும் நினைவுகளாக
மனதில் அழியாது குடியிருப்பீர் தெய்வங்களே!
-மது
மேலும் இது போன்ற கவிதைகளை எனது ‘மதுவின் கவிமழை பாகம்-1’புத்தகத்தை வாங்கி வாசித்திடலாம் https://bit.ly/3sfa3DK
 
			 
		







Really nice. Appreciated…