29.2 C
Batticaloa
Thursday, March 5, 2026
முகப்பு அறிந்து கொள்வோம் அழும் வில்லோ மரம்

அழும் வில்லோ மரம்

0
1060

 

 

 

 

தாவரவியல் பெயர்:சாலிக்ஸ் பாபிலோனிகா‘ (Salix Babylonica)

அழுவதைப் போல தலைகுனிந்து, வளைந்து சோகமாக நிற்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படித் தோற்றமளிப்பவை அழும் வில்லோ மரங்கள். ‘சாலிக்கேசியே’ (Salicaceae) குடும்பத்தைச் சேர்ந்தவை. வட சீனாவைத் தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா முழுவதும் ஆற்றங்கரைகள், ஆழமற்ற நீரோடைகள் ஆகியவற்றின் ஓரங்களில் காணப்படும். இவை 30 மீட்டருக்கும் மேல் ஓங்கி உயரமாக வளரக்கூடியவை. சதுப்பு நிலங்களில் செழிப்பாக வளர்கின்றன. நீண்ட, ஒடிசலான கிளைகளில் நளினமாகத் தொங்குகிற அவற்றின் இலைகள் மெல்லியதாக இருக்கும். மலர்கள் பச்சைக் கொத்துக்களாகக் காணப்படும். நிழல் தரும் இந்த மரம், ஒரு மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 20 மீட்டருக்கு மேலும் உயரம் கொண்டதாகவும் வளரும். இந்த மரத்தின் சிறப்புத் தன்மையே, இது எடை குறைவானதாகவும், அதிக வலுவுள்ளதாகவும் இருப்பதுதான்.

வில்லோ மரங்களில் 400க்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன; அவற்றில் குறிப்பாக ‘வீப்பிங் வில்லோ’ எனப்படும் அழும் வில்லோ மிக வசீகரமான மரம். வளைந்த கிளைகளில் தாழ்ந்த பசுமையான அழகிய நீண்ட இலைகளுடன் இருக்கும் இம்மரம், மழை பெய்யும் பொழுது இலைகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளுடன் கண்ணீர்விட்டு அழுவது போல இருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.

இதன் மரப்பட்டைகளிலிருந்துதான் மிகவும் மிருதுவான, அதே சமயம் அதிக காலம் உழைக்கக்கூடிய கிரிக்கெட் மட்டை (Cricket Bat), விசில், புல்லாங்குழல், மீன் பிடி தூண்டில், வண்ணத் தூரிகைகள், பொம்மைகள், அம்புகள் போன்றவை செய்யப்படுகின்றன. இது மட்டுமல்ல; இந்த மரம் மருத்துவப் பண்புகளையும் உள்ளடக்கியது. உலகில் மிகப் பாதுகாப்பான வலிநீக்கி, காய்ச்சல், வீக்கம் நீக்கும் மருந்தாகப் பயன்படும் ‘ஆஸ்பிரின்’ மருந்து இம்மரத்தின் இலைகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் தன்மை கொண்டதால், ஆஸ்பிரின் மாரடைப்புக்கும் (Heart Attack), புற்றுநோய்க்கும் எதிராகக் குறைந்த அளவில், நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மண் சரிவுகள் ஏற்படாமல் இருக்க மலைப்பிரதேசங்களிலும், சீனா, ஸ்பெயின், அமெரிக்கா, லத்தீன், அமெரிக்கா போன்ற நாடுகளில் வணிக ரீதியாகவும் இவை வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவை கொண்டு வரப்பட்டன.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks