எப்போதும் உங்களிடத்தில்
அன்பிற்கு மண்டியிட்டு நிற்பவர்களிடம்
வெறும் மெழுகுவர்த்திகளை நீட்டாதீர்கள்
ஒரு துயரத்திலிருந்து
மீண்டெழுபவர்களிடம்
அவர்களின் மேனி எங்கும் பரவிக்கிடக்கும்
சாம்பல் புழுதியை பற்றி கேட்காதீர்கள்
அக்கறை என்ற பெயரில் காட்டப்படும்
அன்புத்திமில்களுக்கு
உறவுதான் இருக்க வேண்டுமென
வர்ணம் பூசாதீர்கள்
யாரிடமேனும் தோள் வேண்டுமென்றோ
தோள் தருவேன் என்றோ
நிரந்தரமில்லா வாக்குறுதிகளை
அரசியல்தனமாய் பிரச்சாரம் செய்யாதீர்கள்
மிகப்பெரும் தவிப்புகளையும்
மிக சாதாரணமாய்
கடந்து செல்பவர்களிடமிருந்து
கசந்த பக்கங்களை பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்
நிர்மலமாய் புன்னகைத்துக் கொண்டிருப்பவர்களிடம்
துயரமில்லா மனிதர்கள் என
மறந்தும் சொல்லி விடாதீர்கள்






























