29.2 C
Batticaloa
Tuesday, February 10, 2026

கனவில் வந்த காரிகை

1
1222

நான் ஸ்டெல்லா மேக்குரியை சந்தித்து இன்றோடு ஒருவருடம் முடிகிறது…. ஆரம்பத்தில் ஏதோ காதல் கதையை சொல்லப்போகிறேன் என்று ஆர்வத்தோடு நீங்கள் கண் குத்துவது எனக்கு புரிகிறது… ஆனால் இப்போதே சொல்லிவிடுகிறேன் இது ஒன்றும் காதல் கதையல்ல…. ஒருவித மோதல் கதை . எனக்கும் இந்த பூர்வீக உலகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை ரிச்சர்ட் கால்வெட் ஆகிய நான் கனவில் கண்ட பெண்ணொருத்தி பற்றிய கதை இது… மன்னிக்கவும், இது கதையல்ல நிஜம்.

சரியாக ஒரு வருடத்துக்கு  முன்பு நான் அப்போது தான் அரும்பு மீசை வளர ஆரம்பித்த வாலிபன்… வாலிபத்துக்குரிய அத்தனை சேட்டைகளும் எனக்கு அத்துப்படி.
என் தந்தை ஒரு ராணுவ அதிகாரி அவரை வீடுகளில் காண்பதென்பது அரிது. தாயார் தனித்துவமான சமையல் திறன் கொண்ட என் தோழி…. கூடவே ஒரு குட்டி தங்கை .இப்போது என் அளவுக்கு வளர விருப்பம் கொண்ட சிறுமி…

அப்போதெல்லாம் அடிக்கடி ஒரு கனவு காண்பேன்… கண்ணை மூடினால் நான் வேறு உலகத்துக்கே சென்று விடுவேன்.. மிகவும் பிரயத்தனப்பட்டு தாயார் எழுப்பி விடுவார்கள்.. கனவும் கலைந்து போய்விடும்….
அந்த கனவில் தோன்றுபவள் உண்மையான பெண் அல்ல உலகில் ஒட்டுமொத்த அழகையும் தனக்குள் வாரி சுருட்டி வைத்து கொண்ட பெண் தேவதை….

வருவாள், நடமாடுவாள் ,மறுபடி போய் விடுவாள்.. என்னோடு பேசவே மாட்டாள்… இருக்கட்டும் மறுமுறை கனவில் தோன்றும் போது ஒரு வழி பண்ணி விடுகிறேன்… என்று எனக்கு நானே சவால் விட்டு கொள்ளுவேன். சில நேரங்களில் பைத்தியகரத்தனமாக தோன்றினாலும் அதுவே உண்மை .

ஒவ்வொரு முறை தாயார் தண்ணீர் தெளித்து எழுப்பும் போதும் ரொம்பவும் கோபத்துடன் எழுந்து கத்துவேன்…
ஒரு கனவை முழுசாக காண விடுகிறாயா?”..
விடிந்து விட்டதாக அவர் பொரிந்து தள்ளும் போது தான் மூளைக்கு புரியும்…. அட இவ்வளவு நேரம் கண்டது கனவு என்று.

அன்று வழக்கம் போல என்னுடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு நண்பர்களுடன் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றிற்கு தாய்க்கு தெரியாமல் சென்று விட்டேன்..
11 மணிக்கு மேல் தாமதித்தால் மறுநாள் முழுக்க நான் பட்டினியாக இருக்க வேண்டும்…இது எனது தகப்பன் போட்டுவைத்த சட்டம்.

அந்த தண்டனை இருமுறை அனுபவித்ததே போதும்.. இன்று  எப்படியும் நேரத்திற்கு வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற வெறியுடன் மோட்டார் பைக்கிளை படுவேகத்தில் ஓட்டி கொண்டிருந்தேன்..

நான் இப்படி வேகமாக ஓட்டுவதை யாரேனும் கண்டால் அக்கணமே மயங்கி விழுந்து விடுவார்கள்.. ஆனால் அதிலும் ஒரு அலாதிப்பிரியம்… சரி .
வீட்டை அடைந்துவிட்டேன்.. ஆனால் இந்த கும்மிருட்டு என்னை குழப்பியது.. நான் சரியான நேரத்திற்கு தானே வந்திருக்கிறேன்..  என்றபடி கைக்கடிகாரத்தை பார்த்தேன்…
நான் புறப்படும் போதிருந்த அதே 10.30 …

அதிர்ச்சியோடு விடுதியில் மூன்று மணிநேரத்திற்கு முன்னர் கடிகாரம் விஸ்கியில் நனைந்தது நியாபகத்திற்கு வரவே ..எல்லாம் புரிந்து விட்டது..
ஆக இது நள்ளிரவு தாண்டிவிட்ட ஒரு நேரம் .சரியாக எத்தனை மணி என்று தெரியவில்லை… இப்போது கதவை தட்டினால் நான் தொலைந்தேன்… இருந்தும் புறப்படும் போது நான் செய்த ஒரு காரியம் இப்போது கைகொடுக்க போகிறது.
என் அறையின் ஜன்னலை நான் பூட்டவில்லை… இந்த நேரத்தில் திருடன் கூட இலகுவில் நுழைந்துவிடும் அளவுக்கு பாதுகாப்பற்ற முறையில் அதை விட்டுவைத்திருந்தேன்.

வீட்டுக்கு பின்பக்கமாக சென்று ஜன்னல் வழியாக அறைக்குள் குதிக்க ஆவலோடு சென்ற எனக்கு பேரதிர்ச்சி காத்து கொண்டிருந்தது..
அவளே தான்…. அவள் பெயர் எனக்கு தெரியாது…
அட. இந்த நேரத்தில் என் அறையின் ஜன்னலருகே என்ன செய்கிறாள்…
எனக்கு ஒரே குழப்பம்… ஒருவேளை இது ஒரு கனவாக இருக்குமா? உறுதி செய்து கொள்வோம் என்று எனக்கு நானே கிள்ளி பார்த்தேன்…
“ஆஹ்…”வலிக்கிறதே!    …..

இல்லை இல்லை இது ஏதும் மனப்பிரம்மையாக இருக்க கூடும்… அருகில் சென்றால் அவளாகவே மறைந்து விடுவாள்… அதையும் பரிட்சித்து பார்க்க பூனை போல் நடந்து .என் அறைக்குள் தலையை விட்டு கொண்டு இருந்த அவளை ரகசியமாக நெருங்கினேன்… அவள் இன்னும் மறையாதது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…

“ஹலோ….கொஞ்சம் வழி விடுகிறாயா? நான் என் அறைக்கு செல்ல வேண்டும்…”என்றதும் என் குரல் கேட்டு பயந்து பின்னாடி வர என் மீதே மோதி என் மீதே விழுந்தாள்…

“ஆவ்ச்…”இந்த நேரத்தில் எங்கள் வலியின் அலறல் அம்மாவுக்கு கேட்டிருக்க வேண்டும்.
“கத்தாதே!”
நான் அவள் வாயை இறுக்கமாக மூடிவிட்டேன்.. கண்கள் மட்டும் என்னையே பார்த்து கொண்டிருந்தன..முதல் முறையாக ஒரு அந்நிய பெண்ணை இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறேன். இதயத்துடிப்பின் வேகத்தை  கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனால் அவளோ சட்டென என்னை இருகைகளாலும் தள்ளிவிட்டு…. வானத்தை பார்த்து ஏதோ சைகை செய்ய ,என் கண்களையே என்னால் நம்ம முடியவில்லை. அவ்வளவு பெரிய அது என்னவென்று பெயர் தெரியவில்லை…
ஏலியன் ஷிப் ஆக இருக்கும் என்று எண்ணி நிதானிப்பதற்கிடையில் அடுத்த நொடி அந்த பறக்கும் வாகனத்தில் இருந்தேன்…

கண்ணிமைப்பதைக்கிடையில் நான் இருந்தது அண்டவெளியில் ஒரு அதிசய உலகில்…. என்னை எங்கு அழைத்து வந்தாள் ?,யாரிவள் ? எதுவும் தெரியவில்லை… அவளாகவே பேச்சு கொடுத்தாள்…
ஆனால் அவள் பேசியதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை… விண்வெளிக்கு சொந்தமான ஏதோ ஒரு பாஷை…
எனக்கு புரியவில்லை என்பது அவளுக்கு புரிந்ததும்… என் நெற்றியில் கைவைத்தாள்…. ஏதோ மூளையை குழப்பியது…

“இப்போ நான் பேசுறது புரியுதா?”என்றது புரிந்ததும்
எனக்குள் இருந்த கேள்விகளை எல்லாம் விடுவித்தேன்…

“ரிச்சர்ட்!..இதற்கு முன்னர் என்னை பார்திருக்கிறாயா?”

“கண்டிப்பாக.. என்னுடைய கனவில் அடிக்கடி வந்து போவாய்!”

“அவை ஒன்றும் கனவு கிடையாது… அந்த கனத்தில் உன்னுடைய  பௌதீக உடல் உறங்கு நிலைக்கு செல்ல ஆத்மா ஆகிய நினைவலைகள் இங்கு வந்து போகின்றன…”

“என்னது?”

“இது சூரிய குடும்பத்தை தாண்டி அமைந்துள்ள மம்டாக்  கிரகம்…. நான் இந்த கிரகத்தை சேர்ந்தவள்… ஏன் நீயும் தான்… எங்கள் கிரகத்தை சேர்ந்த டாவிஸி வம்சத்தின் கடைசி வாரிசு….”

“என்ன என்னல்லாமோ ஒளர்ர…

“உன்னுடைய கொள்ளு தாத்தா எங்கள் கிரகத்தை சேர்ந்தவர்… பூமிக்கான அவரது பயணத்தில் உங்கள் கொள்ளு பாட்டியை  சந்தித்து இருவரும் குடும்பமானார்கள்…. அவர் அதன் பிறகு இங்கு வரவே இல்ல…

அவரோட வாரிசுகள் பூமியில்  சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்க இப்போது புதியதொரு பிரச்சினை உருவாகி உள்ளது….”

“என்னாச்சு… இதெல்லாம் நம்ப கஷ்டமா இருக்கு… ஆனா கண்ணு முன்னாடி நடக்கிறதே…”

“உனக்கு பூமியில் குழந்தைகளே பிறக்க போவதில்லை என்பதை எங்களோட விஷேட கருவிகள் காட்டிக்கொடுத்து விட்டன… அன்றிலிருந்து உன்னோடு தொடர்பு கொள்ள மிகவும் முயற்சித்தேன்…

“என்ன என்னெல்லாமோ சொல்லுறே… முதலில் என்னை கொண்டுபோய் வீட்டில் விடு.”

“இன்னும் நான் என்ன சொல்றேன்னு  புரியல்லயா,!
இது ரொம்ப சின்ன கிரகம். இங்க கோர்டினேட்டரா இருக்கிறது என்னோட அப்பா.. அவர் மூலமா தான் உன்னோட விஷயம் தெரிய வந்தது….”

“சரி இப்போ என்ன செய்யணும் என்றிருக்கிறே??..நான் என்னதான் செய்யணும்..”என்று கேட்டேன்.
அவள் வெட்கப்பட்டாள்….எனக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று இன்னமும் தெளிவில்லை… என்னதான் தொழிநுட்ப ஆய்வு ஆராய்ச்சிகள் வளர்ந்தாலும் வேற்றுலகவாசிகள் இருப்பதை என்னால் என் உள் மனம் ஏற்க மறுத்தது..

“நீ இங்கேயே இருக்க வேண்டும்.. இல்லையேல்.. இங்குள்ள யாராவது பெண்ணை மணந்து ..அவள் மூலமாக ஒரு குழந்தையை…..”என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்   “என்ன !”என்று அதிர்ச்சி அடைந்தேன்….

என்னுடைய சத்தத்தில் அவளும் நானும் இருந்த அறைக்கதவை யாரோ திறந்தார்கள்…

“அப்பா…!”
“ஸ்டெல்லா!…உண்மையில் இதை எதிர்பார்க்க வில்லை… நீ அவனை கொண்டு வந்து விட்டாயே!”என்று அவர் ஆச்சரியத்தோடு சொல்லிக்கொண்டே உள்ளே வர இன்னும் சிலரும் அவருக்கு பின்னாடி வந்து சேந்தார்கள்…

“இந்நேரம் என் மகள் அனைத்தையும் உங்களுக்கு சொல்லி இருப்பாள் என்று நினைக்கிறேன்… உங்கள் முடிவு நல்லதாக இருக்கட்டும்… உங்கள் பரம்பரை உங்களோடு முடிவு பெறுவது கூடாது…”என்றார்…

நான் அவளையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தேன்… அம்மாவின் முகம் வந்து போனது…

“சரி…ஆனால் என்னால் நிரந்தரமாக இங்கு வாழ முடியாது… இரண்டாவது ஏற்பாடை செய்யுங்கள்…”என்றேன்…முழுவதும் மனதை கல்லாக்கி கொண்டு….
நான் காதலித்து திருமணம் செய்ய வேண்டும்.. அவளுடன் இன்பமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தீவிரமாக இருந்தவன்…
இப்போது யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக முன் பின் தெரியாத ஒரு பெண்ணுடன்….
மனது கசப்பை உணர்ந்தது.. ஆனால் அவர்கள் அத்தனை பேரின் முகத்திலும் ஆனந்தம் தெரிந்தது…

ஸ்டெல்லா என்னை அழைத்து கொண்டு.. எனக்கான அறையில் காத்திருக்கும் படி சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்… இந்த கிரகத்தில் ஆணும் பெண்ணும் இணைவது தான் திருமணமாம்… என்று சொன்னதை கேட்டு உள்ளார சிரித்து கொண்டேன்…

இரவாகி இருந்தது…. அறைகதவு திறந்த போது ஸ்டெல்லா வந்தாள்… கொஞ்சம் வெட்கம் அவளது முகத்தில் பரவியதை உணர்ந்தேன்… அவளை தாண்டி கதவு வழியாக வரப்போறவளை ஆவலோடு எட்டி பார்த்தேன்… நான் அவ்வாறு செய்வதை பார்த்து ஸ்டெல்லா சிரித்தாள்…

“என்ன?”
“அவ்வளவு ஆவலா?”
“பின்னே இல்லையா…. என் வாழ்க்கை ஆயிர்றே…”
“அவள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”
“அப்படியெல்லாம் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை.. என்ன என்னை ரொம்பவும் காதலிக்க கூடியவளாக இருக்க வேண்டும்..”என்று கூறி பெருமூச்சு விட்டேன்..
அவள் என் நெற்றியில் மெல்லமாய் தடவி..
“நிச்சயமாக நான் அப்படியான பெண் தான்..”என்றாள்.
எனக்கு நிரம்ப ஆச்சர்யம்…

“என்ன சொல்கிறாய்… அப்படியென்றால்…”

“என் காதல் ரொம்ப மோசமானது… யாருக்கும் தெரியாமல் உன்னை ரசித்தேன்… காதலித்தேன்…”என்றாள்.. அந்த வார்த்தைகளில் உண்மை தெரிந்தது..
அவளுக்காக எதையும் இழக்கலாம் என்ற நிலை உடனே உருவானது… அன்றைய இரவு அற்புதமாய் இருந்தது…
வாழ்க்கை முழுதும் அங்கேயே இருந்துவிட மனது எண்ணியது.. அவள் என் மனைவியாக மாறிப்போனது இன்னும் மறக்கவில்லை…

மறுநாள் காலை…

நான் கண்விழித்து பார்த்த போது என் படுக்கையில் இருந்தேன்… எனக்கே அதிர்ச்சியாக இருந்தது…. என்ன நடந்தது …என்பதை யூகிப்பதற்கிடையில் எல்லாம் முடிந்து போனது…. இன்றோடு சரியாக  ஒருவருடம் ஆகிவிட்டது… அவளை அடிக்கடி கனவில் காண்கிறேன்… பேச முயற்சிக்கிறேன் …ஆனால். அவளை தொட முடியவில்லை… இன்னொரு தடவை என் குழந்தையோடு என்னை பார்க்க வருவாள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்…..

மறுமுறை அவளை சந்திக்கும் போது என்னை இப்படி ஆசைகாட்டி மோசம் செய்ததற்கு சரியான காரணத்தை கண்டிப்பாக அவள் எனக்கு சொல்ல வேண்டும்…

இந்த சம்பவத்தை யாரிடமும் இதுவரை நான் சொன்னதில்லை.. என்னை பைத்தியக்காரன் என்று மற்றவர் பேசுவதை நான் விரும்பவில்லை…ஆனால் ஒன்று மட்டும் உண்மை .ஸ்டெல்லா மேக்குரி. என் கனவில் வந்த காரிகை… வேற்றுலகவாசி ..ஏன் நானும் ஒரு பிற கிரகத்தின் வாரிசு என்று எனக்கு நன்றாகவே தெரியும்…
ஆனால் உண்மையில் சொல்லப்போனால் என் தாய் கூட நான் சொல்வதை நம்ப போவதில்லை….என் வாழ்நாளில் ஒரே ஒரு நாளில் நடந்த இந்த சம்பவம் ..என்னை முற்றிலும் மாற்றி இருந்தது.
நான் ரிச்சர்ட் கால்வெட் என் கனவு காரிகைக்காக இன்னும் காத்து கொண்டிருக்கிறேன்..

நன்றி.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
வஞ்சிமறவன்
5 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Amazing story
Nice…..

error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
1
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks