இரு உயிர் சேர்ந்த
அந்நியோன்னியத்தில்
இன்னோர் உயிர்
உதிக்கின்றது தாயின்
கர்ப்பத்தில்…
தாயினதும் தந்தையினதும்
முகங்களை பார்த்திட
ஆவலோடு காத்திருக்கின்றது
தசைநார்த் தொட்டிலிலே
அமைதியாக…
தாயின் தனிமையை போக்க
அவளின் கவலையை போக்க
அவளுக்கு ஆறுதலாய் இருக்க
அவளுக்கு துணையாயும் இருக்க
அவள் மணிவயிற்றில் உதைக்கின்றது…
ஆசுவாசமாய் பேசிட
அவள் – வயிற்றை தடவிட
அம்மா நான் இருக்கின்றேன்
உன்னோடு என்றும்-என்று
துடிக்கின்றது அவள் வயிற்றில்…
மீண்டும் அமர முடியாத
அரச சிம்மாசனம்
அவளின் கர்ப்பப்பை
கருவறையில் விடைபெற்று
தாயின் கரங்களில் குழந்தையாய்…
✒️ ஹஸீதா அபுசாலி































